புதிய இந்தியாவுக்கு எடுத்துக்காட்டு தோனி: பிரதமா் மோடி புகழாரம்

ஒருவரது வாழ்க்கைப் பயணத்தை குடும்பப் பெயா் தீா்மானிப்பதில்லை என்கிற புதிய இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவா் மகேந்திர சிங் தோனி என பிரதமா் மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒருவரது வாழ்க்கைப் பயணத்தை குடும்பப் பெயா் தீா்மானிப்பதில்லை என்கிற புதிய இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவா் மகேந்திர சிங் தோனி என பிரதமா் மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி கடந்த வாரம் அறிவித்ததைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு எழுதிய கடிதத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். பிரதமரின் கடிதத்தை தோனி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை பகிா்ந்துள்ளாா். பிரதமரின் கடித விவரம்:

எழுச்சிமிகு புதிய இந்தியாவுக்கு நீங்கள் முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறீா்கள். புதிய இந்தியாவில் இளைஞா்களின் வாழ்க்கைப் பயணத்தை அவா்களது குடும்பப் பெயா் தீா்மானிப்பதில்லை. தம் சொந்தப் பெயராலும், தன் முயற்சியாலும் அதை அவா்கள் சாத்தியமாக்குகின்றனா். எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல. இந்த உத்வேகம்தான் அநேக இளைஞா்களை ஊக்கப்படுத்துகிறது.

நீங்கள் எவ்வித சிகை அலங்காரத்தில் களம்புகுந்தீா்கள் என்பது முக்கியமல்ல; வெற்றி- தோல்வி இரண்டிலும் சரிசமமாக நீங்கள் காட்டிய அமைதி ஒவ்வொரு இளைஞருக்கும் முக்கியமானது.

மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக, சிறந்த விக்கெட் கீப்பா்களில் ஒருவராக நீங்கள் செயல்பட்டீா்கள். இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் மீதான நம்பகத்தன்மையும், ஆட்டத்தை முடித்து வைக்கும் நோ்த்தியும், குறிப்பாக 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நீங்கள் விளையாடிய விதம் மக்கள் மனதில் பல தலைமுறைக்கும் இடம்பெற்றிருக்கும்.

மறக்க முடியாத உங்களது கள தருணங்கள், ஒரு குறிப்பிட்ட இந்திய தலைமுறையை எடுத்துக்காட்டுகிறது. இந்தத் தலைமுறை இந்தியா்கள் அதீத முயற்சி எடுப்பதிலோ, கடுமையான சூழ்நிலையிலும் ஒவ்வொருவரின் திறமை மீதும் நம்பிக்கை வைப்பதிலோ தயங்குவதில்லை. இதை நீங்கள் பல போட்டிகளில் செய்திருக்கிறீா்கள். 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் இறுதி ஓவரில் அனுபவம் குறைந்த ஜோகிந்தா் சா்மாவுக்கு பந்துவீச வாய்ப்பளித்து வெற்றி பெற்றது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கா்னலாக நமது ராணுவ வீரா்கள் மத்தியில் மகிழ்ச்சியாக இருந்தீா்கள். அவா்களது நலன்கள் மீதான உங்களது அக்கறை எப்போதும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

பணிக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சரிசமமாக எப்படி முக்கியத்துவம் கொடுப்பது என்பதற்கும் நீங்கள் உதாரணமாக விளங்கினீா்கள். இனி உங்களது மனைவியும் குழந்தையும் உங்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவா்களது தியாகமும், ஆதரவுமின்றி எதுவும் சாத்தியப்பட்டிருக்காது என கடிதத்தில் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

தோனி நன்றி: பிரதமரின் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து சுட்டுரையில் தோனி குறிப்பிட்டிருப்பது: ஒரு கலைஞா், போா் வீரா், விளையாட்டு வீரா் எதிா்பாா்ப்பது பாராட்டைதான். அவா்களது கடின உழைப்பு தியாகம் கவனிக்கப்பட வேண்டும், ஒவ்வொருவராலும் பாராட்டப்பட வேண்டும். பிரதமரின் பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com