உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவைக் கணக்கிட தண்ணீர் மீட்டர் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வீணாவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, நகரத்தில் 79,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் மீட்டர்களை நிறுவ நொய்டா நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. செவ்வாயன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், மல்டி ஜெட் நீர் பாய்ச்சல் தொழில்நுட்பத்திற்கான பணிக்காக ரூ.99.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து முதற்கட்டமாக 10 சதவிகித வீடுகளுக்கு தண்ணீர் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய முறையின் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும் எனத் தெரிவித்த அதிகாரிகள் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீருக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என விளக்கமளித்தனர்.
தண்ணீர் மீட்டர் முறை மூலம் பொதுமக்கள் நுகரும் தண்ணீர் பயன்பாட்டை கணக்கிட்டு அதற்கேற்றார்போல் அவர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும்
தண்ணீர் மீட்டர்களை நிறுவுவதற்கும், 10 ஆண்டுகள் வரை பராமரிப்புகளை மேற்கொள்வதற்கும் ஒரு தனியார் நிறுவனத்தை பணியமர்த்த நொய்டா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்குள் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறையான அளவில் குடிநீர் விநியோகம் நடந்து வரும் நிலையில் அதனை நிவர்த்தி செய்யாமல் நீர் வீணாவதைத் தடுப்பது எனும் பெயரில் மீட்டர் முறையை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.