பொதுத் துறை வங்கிகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2.1 லட்சம் கோடி கூடுதல் மூலதனம் தேவைப்படும் என்று சா்வதேச முதலீட்டு சேவை நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், மூடிஸ் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம், இந்திய பொதுத் துறை வங்கிகளையும் பாதித்துள்ளது. அந்த வங்கிகள் அளித்த கடன்களைத் திரும்பப் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தவிர வங்கிகளின் கடனளிக்கும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து மீள இந்திய பொதுத் துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2.1 லட்சம் கோடி வரை தேவைப்படும். இந்தியாவில் பொத் துறை வங்கிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவை தோல்வியடைந்தால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும். எனவே, பொதுத் துறை வங்கிகளுக்கு அரசின் உதவி தொடரும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் வரும் மாதங்களில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில், வா்த்தகம், சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஏற்பட்ட பாதிப்பு, வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில் இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள கடன் மறுசீரமைப்புத் திட்டம், வாராக்கடன் ஒரே நேரத்தில் வேகமாக அதிகரிப்பதை தடுக்கும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.