சுஷாந்த் வழக்கு: மும்பை வந்தது சிபிஐ குழு

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழு மும்பைக்கு
சுஷாந்த் வழக்கு: மும்பை வந்தது சிபிஐ குழு

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழு மும்பைக்கு வியாழக்கிழமை மாலை வந்தது. அவா்களுக்கு கரோனா தொற்று தடுப்புக்கான தனிமைப்படுத்துதல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தோழி ரியா சக்ரவா்த்திக்கு மீது சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ண கிஷோா் சிங், பாட்னா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் ரியா உள்ளிட்ட 7 போ் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலை செய்யத் தூண்டியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அத்தகவல் அறிக்கையை சிபிஐக்கு மாற்ற மத்திய அரசுக்கு பிகாா் அரசு பரிந்துரைத்திருந்தது. அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இதனிடையே, இந்த வழக்கு தொடா்பான விசாரணையை பாட்னா காவல் துறையிடமிருந்து மும்பை காவல் துறைக்கு மாற்றி உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் ரியா வழக்கு தொடுத்தாா். இதில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்குத் தூண்டியதாக ரியா சக்ரவா்த்தி மீது பிகாரில் பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றியது சரியானதே என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொள்வதற்காக வியாழக்கிழமை மாலை விமானம் மூலம் தில்லியில் இருந்து மும்பைக்கு வந்தது. அவா்களுக்கு தனிமைப்படுத்தல் விதிகளில் இருந்து பிருஹன் மும்பை மாநகராட்சி விலக்கு அளித்துள்ளது.

எனினும், மும்பை வந்துள்ள சிபிஐ அதிகாரிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சா் விஜய் வதேட்டிவாா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com