திருவனந்தபுரம் விமான நிலைய விவகாரம்: மத்திய அமைச்சர் விளக்கம்

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கான ஏலம் எடுக்கும் முயற்சியில் கேரள அரசு தகுதி பெறவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கான ஏலம் எடுக்கும் பணியில் கேரள அரசு தகுதி பெறவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பல்வேறு விமான நிலையங்களை  குறிப்பிட்ட கால அளவில் தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட புதன்கிழமை மத்திய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்தது.

இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தின் ஆளும் இடதுமுன்னணி அரசு சார்பில் முதல்வர் பினராய் விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசின் ஒருதலைபட்சமான இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பினராய் விஜயன் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் இதுகுறித்து விவாதிப்பதற்காக வியாழக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,  திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கான ஏலம் எடுக்கும் பணியில் கேரள அரசு தகுதி பெறவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஏலம் எடுக்கும் நடவடிக்கை வெளிப்படையாகத் தான் செயல்படுத்தப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சர் ஏலம் திறக்கப்பட்டபோது கேரள மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்திற்கும் அடுத்த அதானி குழுமத்திற்கும் இடையில் 19.64% வித்தியாசம் இருந்தது என தனது சுட்டுரைப் பதிவில் விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com