மேற்குவங்கத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மேற்குவங்கத்தில் இம்மாதம் முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுக்க ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
அந்தவகையில் வெள்ளிக்கிழமையான இன்று மேற்குவங்கம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 5 மற்றும் 8-ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதேபோல் இன்று தவிர்த்து வரும் 27 மற்றும் 31-ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளது.
இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
மக்கள் அத்தியாவசிய தேவைகளான மருத்துவம் மற்றும் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது தவிர்த்து தேவையின்றி வெளியே வரவேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பார்சல் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் இன்று கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கால் மாநிலத்தின் பல்வேறு மாநிலங்களில் சாலைகள் வெறிச்சோடின.