தெலங்கானாவில் புதிதாக 1,967 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு ஒருலட்சத்தை நெருங்குகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,967 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 99,391-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,767 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 8,48,078 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனாவால் இதுவரை 737 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் விகிதம் 0.74 சதவிகிதமாக உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டுடன் ஒப்பிடும்போது 1.90 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 53.87-ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.