பிகாரில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கத்தின் பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் பொதுப்போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையொட்டி கடந்த மார்ச் மாதம் முதல் பிகாரில் பொதுப்போக்குவரத்து இயங்கவில்லை.
இந்நிலையில் பிகாரில் நடைப்பெற்ற மாநில நெருக்கடி மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில், ஆகஸ்ட் 25 முதல் மாநிலத்தில் பேருந்து சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முறையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, "வாகனங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் பேருந்து சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். வாகனங்களில் ஏறும் போது சமூக தூரத்தை பின்பற்ற வேண்டும், பயணிகள் பயணிக்கும் போது முகமூடி அணிய வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.