பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களையும் செப்டம்பர் 1 முதல் பணியில் இணைய சிக்கிம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கவில்லையெனினும் பல மாநிலங்கள் செப்டம்பர் மாதம் முதல் கல்வி நிறுவனங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளன.
அதன்படி சிக்கிம் அரசு, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு வியாழக்கிழமை உத்தரவிட்டது. எனினும் பள்ளிகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 31 வரை நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. சிக்கிம் மாநிலத்தில் இதுவரை 1486 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குரிப்பிடத்தக்கது.