இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,935 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இன்று 27 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 27,13,933 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 76.61 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையைக் (7,65,302) காட்டிலும் கூடுதலாக 19,48,631 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கரோனா தொற்றால் மொத்தம் பாதித்தோரில் 21.60 சதவிகிதத்தினர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து குறைந்து வரும் இறப்பு விகிதம் இன்று 1.79 சதவிகிதமாக உள்ளது."
உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.