கேரளத்தில் புதிதாக 2,154 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவல்:
"கேரளத்தில் புதிதாக 2,154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 49 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 110 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 1,962 பேர் உள்ளூர் பரவல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 174 பேருக்கு யார் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,766 பேரின் பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இதுவரை மொத்தம் 49,849 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 23,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் 1,99,468 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். 2,378 பேர் இன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்."