திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு சென்னையைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் மினிலாரி ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பின் முதல் வாகனத்தை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளித்து வருகிறது. அதன்படி தற்போது அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பான படாதோஸ்த் என்ற பெயரிலான மினி லாரியை ஏழுமலையானுக்கு வழங்கத் தீா்மானிக்கப்பட்டது.
ஏழுமலையான் கோயில் முன்னிலையில் சனிக்கிழமை, இந்த லாரிக்கு வாழைக்கன்று, மாவிலைத் தோரணங்கள் கட்டி, மலா்களால் அலங்கரித்து, தேங்காய் உடைத்து பழங்களை படைத்து கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தனா். அதன் பின் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரியான நிதின் சேத், தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் மினிலாரியின் ஆவணங்கள் மற்றும் சாவியை ஒப்படைத்தாா். நன்கொடையாக அளிக்கப்பட்ட மினிலாரியின் மதிப்பு ரூ.9 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.