கரோனா பெருந்தொற்று பரவலால், ஓணம் பண்டிகையை கொண்டாடும்போது மக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின்குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ''ஓணம் பண்டிகையை நாட்டு மக்கள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். ஓணம் பண்டிகையின்போது வீடுகளை பூக்களால் மக்கள் அலங்கரிப்பார்கள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். பண்டிகையை கொண்டாடும்போது கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்'' என்று கூறினார்.
மேலும், ''கலாச்சாரத்தை காக்கும் வகையிலான பொம்மைகள் உருவாக்கும் மையமாக தஞ்சாவூர் உள்ளது. பொம்மைகள் உருவாக்கும் முறை புதிய கல்விக்கொள்கையில் பாடத்திட்டமாக சேர்க்கப்படும். மேலும் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்குவதன் மூலம் நமது சிறப்புத்தன்மையை உலகிற்கு பறைசாற்ற இயலும்'' என்று தெரிவித்தார்.
''அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகை காலத்தையொட்டி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்''.
''இன்னும் சில நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாட உள்ளோம். கரோனா காலத்தில் இந்திய ஆசிரியர்கள் மிக சவாலான பணிகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்'' என்று கூறினார்.