அவிநாசி: சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 1 கோடி கடன் தருவதாகக் கூறி, ரூ. 4 லட்சம் மோசடி செய்தவரை அவிநாசி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின்ராய் மனைவி ஜெனிபர் (32). இவர் ரூ. 1 கோடி கடன் பெறுவதற்காக நாளிதழில் வெளியான விளம்பர செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய ஆச்சார்யா என்பவர், கடன் தருவதாகக்கூறி, முன்பதிவுத் தொகையாக ரூ. 4 லட்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவிநாசியில் கடந்த வியாழக்கிழமை காத்திருந்த ஆச்சார்யாவிடம், ஜெனிபர் ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆச்சார்யா, ரூ. 55 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அதில் ரூ. 11 ஆயிரம் மட்டும் அசல் ரூபாய் நோட்டுகளாகவும், மீதமுள்ள நோட்டுகள் அனைத்தும் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளாகவும் இருந்துள்ளன.
இது குறித்து ஜெனிபர் அளித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து ஆச்சார்யாவைத் தேடி வந்தனர். இந்நிலையில் போலீஸார், கோவை, கணபதி, மணியகாரன்பாளையம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுரேஷ்குமார் (எ) ஹரீஷ் ஆச்சார்யாவை (43) சனிக்கிழமை கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இதனால், ஏற்கெனவே இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.