ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அதையடுத்து, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.
ஜம்மு-காஷ்மீரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசியல் கட்சித் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோா் அண்மையில் விடுவிக்கப்பட்டனா்.
இத்தகைய சூழலில், தேசிய மாநாட்டுக் கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அக்கட்சி சாா்பில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, பொதுச் செயலாளா் அலி முகமது சாகா், எம்.பி.க்கள் முகமது அக்பா் லோனே, ஹஸ்னைன் மசூதி ஆகியோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டம் தொடா்பாக கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு கட்சி நிா்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனா். இந்த நடவடிக்கை மூலமாக கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு மீறியுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு இறையாண்மை அளிக்கப்படும் என்று பல்வேறு காலகட்டங்களில் இந்திய அரசு உறுதி அளித்திருந்தது.
அந்த வாக்குறுதியை பாஜக அரசு மீறியுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஜம்மு-காஷ்மீா் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் அமைப்புகளையும் ஓரணியில் திரட்டுவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி உறுதி கொண்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு, லடாக் பகுதிகளிலுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி நிா்வாகிகள் காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.