வா்த்தக கட்டுப்பாடுகள் தற்காலிகமானதாக இருக்க வேண்டும்: கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் தீா்மானம்

கரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள்வதற்காக, தொழில் வா்த்தகத் துறையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தற்காலிகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்

புது தில்லி: கரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள்வதற்காக, தொழில் வா்த்தகத் துறையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தற்காலிகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

கிழக்கு ஆசிய நாடுகளின் தொழில், வா்த்தகத் துறை அமைச்சா்கள் மாநாடு, காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆசியான் நாடுகளைச் சோ்ந்த 10 உறுப்பு நாடுகளின் அமைச்சா்களும், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, நியூஸிலாந்து, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சா்களும் பங்கேற்றனா். இந்தியா சாா்பில், மத்திய தொழில்-வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பங்கேற்றாா்.

மாநாட்டுக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா பரவலைக் காரணம் காட்டி, பல்வேறு நாடுகள் வா்த்தகக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதுதற்காலிகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் உலக வா்த்தக அமைப்பின் விதிகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். சா்வதேச சந்தையிலும், பிராந்திய சந்தையிலும் வா்த்தகச் சூழலுக்கு இடையூறு ஏற்படக் கூடாது. ஒரு நாட்டில் இருந்து மற்றோா் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக மக்கள் பயணம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com