விமானம் மற்றும் விமான நிலையங்களை அரசு நடத்தத் தேவையில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நமோ செயலியின் இணைய சந்திப்பில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ஏர் இந்தியா நிறுவனம் ஒரு சொத்தாக இருந்து வருகிறது, மிகப்பெரிய சாதனை படைத்த, மிகவும் பயிற்சி பெற்ற தொழில்முறை நபர்களை ஏர் இந்தியா கொண்டுள்ளது. ஆனால் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களை அரசு நடத்தத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பணிகள் 2020ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும்.” எனத் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 வருட காலத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை கேரள அரசு எதிர்க்கும் நேரத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள இந்தக் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.