குஜராத் மாநிலம் நர்மதா நதி வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் குஜராத் மாநிலத்திலும் கடந்த சில நாள்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கடந்த 2 நாள்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். டாப்பி, கிர் சோம்நாத் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதிகளில் தலா இருவரும், நர்மதா, போடாட், கூச், பாவ்நகர் மற்றும் ஜுனகத் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
தொடர் மழையால் தாரோய் பகுதியில் உள்ள அணை 80 சதவிகிதம் நிரம்பியதால், சபர்மதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் சபர்மதி ஆற்றங்கரையையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தபோய் மாவட்டத்தின் சாந்தோடு பகுதியில் நர்மதா ஆற்றின் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வந்த 9 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். வெள்ளத்திலிருந்து மீட்பக்கட்டவர்களில் சிலர் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.