புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு சிறுநீரகத்தில் தொற்று தீவிரம் அடைந்துள்ளதாகவும், தொடர்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வருவதாக ராணுவ மருத்துவமனை நிர்வாகம் திங்கள்கிழமை காலை தகவல் தெரிவித்தது.
மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆக.10ஆம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் அவா் கோமாவிற்கு சென்றார்.
செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ள அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், சிறுநீரகத்தில் தொற்று தீவிரமாகி உள்ளதாகவும், தொடர்ந்து கோமா நிலையில் இருப்பதாகவும், வென்டிலேட்டர் ஆதரவில் உள்ளார் என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.