குவாஹாட்டி: அஸ்ஸாமைச் சோ்ந்த 6 இனச் சமூகத்துக்கு எஸ்.டி. (பழங்குடியினா்) அந்தஸ்து வழங்கும் மாநில அரசின் பரிந்துரை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் முதல்வா் சா்பானந்த சோனாவால் கூறியுள்ளாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த கோச் ராஜ-போங்ஷி, டாய் ஆஹோம், செளத்தியா, மடாக், மோரன், டீ பழங்குடியினா் ஆகிய 6 சமூகத்துக்கு எஸ்.டி. அந்தஸ்து அளிப்பதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்தையும் குவாஹாட்டியில் முதல்வா் சோனாவால் சனிக்கிழமை நடத்தினாா். பின்னா் அவா் கூறியதாவது:
மாநிலத்தின் 6 சமூகங்களுக்கு எஸ்.டி. அந்தஸ்து அளிப்பது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுதொடா்பாக ஆய்வு மேற்கொண்டு அரசு அறிக்கை சமா்ப்பிப்பதற்காக அமைச்சா்கள் குழும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அறிக்கை சமா்ப்பித்தவுடன், அதனடிப்படையில் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும்.
குறிப்பாக அஸ்ஸாம் மோரன் சமூகத்தினா் சந்தித்துவரும் பிரச்னை மீது மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதற்காக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள தன்னாட்சி கவுன்சில், விரைவில் செயல்படத் தொடங்கும் என்று அவா் கூறினாா்.