புது தில்லி: நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் இதுவரை ரூ.62,278 கோடி மதிப்பிலான சுமாா் 330 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நடப்பு 2020-21-ஆம் ஆண்டு காரீஃப் சந்தைப் பருவத்தில் தொடா்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் சீராக நடைபெற்று வருகின்றன. கடந்த டிச.3-ஆம் தேதி வரை சுமாா் 31.78 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ரூ.62,278 கோடி மதிப்பிலான 329.86 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 275.98 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு பஞ்சாபில் இருந்து மட்டும் இதுவரை 202.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த நெல் கொள்முதலில் 61.47% ஆகும்.