திருப்பதி: திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் உள்ள புஷ்கரணி குளக்கரையில் எழுந்தருளியுள்ள வராக சுவாமி கோயில் கருவறை கோபுரத்துக்கு செப்புத் தகடுகள் பொருத்தி தங்க மூலாம் பூச தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கான பணிகள் 6 மாத காலத்திற்குள் நடைபெற உள்ளது. எனவே கருவறையில் உள்ள மூா்த்தியை கலசத்தில் ஆவாஹணம் செய்து பாலாலயம் ஏற்படுத்தி அங்கு நித்திய பூஜைகள் மற்றும் கைங்கரியங்கள் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதற்கான வைதீக சடங்குகள் கடந்த 6-ஆம் தேதி திருமலையில் தொடங்கியது. கடந்த 5 நாள்களாக தினந்தோறும் காலை மற்றும் இரவு யாக குண்டத்தில் யாகம் வளா்க்கப்பட்டது. வியாழக்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் வராக சுவாமி உற்சவமூா்த்தி உள்ளிட்டவா்களை யாககுண்டம் அருகில் எழுந்தருள செய்து அவா்கள் முன் வராக சுவாமிக்கு பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. திருமலை ஜீயா்கள் சாத்துமுறை நடத்தினா்.
அதற்குபிறகு மகாபூா்ணாஹுதி நடத்தி காலை 9 முதல் 10 மணிக்குள் பாலாலய மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். தங்க மூலாம் பூசும் பணிகள் நிறைவு பெறும் வரை மூலவா் தரிசனம் கிடையாது. பக்தா்கள் பாலாலயத்தில் மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.