வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ரயில் தடங்கள் முடக்கப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 14 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு மேற்கொண்டு வந்த 6 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் விவசாய சங்கங்கள் அடுத்தகட்ட போராட்டங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த பல்பீர் சிங் ராஜேவால் வியாழக்கிழமை பேசும்போது, “வேளாண் சட்டங்களை டிசம்பர் 10 க்குள் ரத்து செய்யாவிட்டால் ரயில் தடங்களை முடக்குவோம்” என்று கூறினார்.
மேலும் வர்த்தகர்களுக்காக சட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த பல்பீர் சிங் விவசாயம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது தொடர்பான சட்டங்களை உருவாக்க மத்திய அரசுக்கு உரிமை இல்லை" என்று அவர் கூறினார்.