தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை படுகொலை செய்யவும் பாஜக தயங்காது என திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில பஞ்சாயத்து அமைச்சருமான சுப்ரதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சனிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழா ஒன்றில் சுப்ரதா பானர்ஜி பேசியது:
"மம்தா பானர்ஜியை நீக்க பாஜக திட்டம் தீட்டுகிறது. மம்தாவை தேர்தலில் தோற்கடிக்க முடியவில்லை என்றால், அவரை ரகசியமாகப் படுகொலை செய்யக்கூட பாஜக, ஆட்களை நியமிக்கும்.
மேற்கு வங்கத்தில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்காக மாநிலத்தின் வெளியிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறது. நாம் அவர்களது திட்டத்தை தவிடுபொடியாக்குவோம்.
ஜெ.பி. நட்டா வாகனத்தின் மீது தாக்குதல் நிகழ்ந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவரது வாகனத்தில் கல் எறிவதற்கு பாஜகவே ஆட்களை நியமித்திருப்பது உறுதியாகியுள்ளது" என்றார் அவர்.
சுப்ரதாவின் பேச்சு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் ரூபா கங்குலி தெரிவிக்கையில், "ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெறுவதையே பாஜக நம்புகிறது. சுப்ரதா முகர்ஜி போன்ற தலைவர்கள் அனுதாபம் தேடுவதற்காக இதுமாதிரியான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்" என்றார்.