கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்.
கேரளத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டமிட்டு அதன்படி, முதல்கட்டத் தேர்தல் கடந்த 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 10 ஆம் தேதியும் நடைபெற்றது.
முன்னதாக 10 மாவட்டங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து இன்று மூன்றாம் கட்டத் தேர்தல் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 354 உள்ளாட்சி அமைப்புகளில் 6,867 வார்டுகளில் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 10,842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி, மலப்புரம்-17.11, கோழிக்கோடு-16.76, கண்ணூர்-17.08 மற்றும் காசர்கோடு-16.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை கண்ணூரில் உள்ள செரிக்கால் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்குச்சாவடிகளில் கரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை வருகிற 16 ஆம் தேதி நடைபெறுகிறது.