புது தில்லி: தினசரி கரோனா பாதிப்பை விடவும், தினசரி குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை (94,89,740) நெருங்குகிறது. குணமடைந்தோர் வீதம் இன்று 95.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி தற்போது 91,67,374-ஆக உள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் தற்போது 3,22,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.24 சதவீதம்.
குணமடைவோர் வீதம், அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உலகளாவிய குணமடைந்தோர் வீதம் 70.27 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் இது 95.31 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றம் இத்தாலி போன்ற நாடுகளில் குணமடைவோர் வீதம் குறைவாக உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 33,291 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 24,010 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 355 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி உயிரிழப்பு இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருவதால், உயிரிழப்போர் வீதம் 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. இறப்பு வீதம் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.