காசநோயற்ற இந்தியாவை உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
75-ஆவது தேசிய காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ வர்தன், காணொலி மூலம் இன்று உரையாற்றினார். அதில், “காசநோய் இல்லாத இந்தியா”-வை உருவாக்குவதற்காக தொடர்புடைய அனைவரின் முழு ஒத்துழைப்பும் தேவை.
இந்த இலட்சியத்தை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றன. நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஊட்டச்சத்துக்காக ரூ.886 கோடிக்கும் அதிகமான நிதி, வங்கிக்கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
1939-ஆம் ஆண்டில் இந்தியக் காசநோய் சங்கம் நிறுவப்பட்டதில் இருந்து கடந்த 80 ஆண்டுகளாக தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் அச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள்.
கரோனா பெருந்தொற்றின் போது காசநோயை எதிர்த்துப் போரிட்ட காசநோய் வீரர்களின் உறுதி நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார ஊழியர்களுக்கு ஊக்கம் அளித்தது,” என்று அவர் கூறினார்.