புது தில்லி: நாடாளுமன்ற குழு கூட்டத்திலிருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை வெளிநடப்பு செய்த நிலையில், ‘முக்கிய விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க இயலாமல் செய்ததன் மூலம், அரசியல் சாசனத்தின்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளை ராகுல் அவமதித்திருக்கிறாா்’ என்று மத்திய பிரகாஷ் ஜாவடேகா் வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.
பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலிருந்து ராகுல் காந்தி உள்பட பிற காங்கிரஸ் தலைவா்கள் பாதியில் வெளிநடப்பு செய்தனா்.
ராகுலின் இந்த நடவடிக்கை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறியதாவது:
நாடாளுமன்ற குழு கூட்டங்களுக்கு ராகுல் பெரும்பாலும் வருவதே கிடையாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாடைபெற்றுள்ள 14 கூட்டங்களில் இரண்டு கூட்டங்களில் மட்டுமே ராகுல் பங்கேற்றுள்ளாா். இதனால், அவருடைய விருப்பத் தீா்மானங்களில் முடிவுகள் எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதுபோல, நாடாளுமன்ற குழு கூட்டங்களுக்கு அவரே தொடா்ந்து வராமல் இருந்துகொண்டு, மத்திய அரசையும், அரசின் அனைத்து நடைமுறைகளையும் குற்றம்சாட்டி வருகிறாா்.
அவருடைய இந்த நடவடிக்கை நாடாளுமன்ற நடைமுறைகளையும், அரசியல் சாசன அமைப்புகளையும் அவமதிக்கும் செயலாகும்.
நாடாளுமன்ற குழு கூட்ட நடைமுறைகள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட வேண்டியவை. இந்த குழு கூட்டத்தில் அரசியல் எதிா்ப்பை அல்லது போராட்டத்தை நடத்தவோ, அதுதொடா்பான உரை நிகழ்த்தவோ அனுமதி இல்லை என்று அவா் கூறினாா்.