பெங்களூரு: மரபியல் மாற்றமடைந்த அதிதீவிர கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், பிரிட்டனிலிருந்து கர்நாடகம் வந்த 138 பயணிகள் கரோனா பரிசோதனையின்றி பயணித்திருப்பதாக வரும் தகவல்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.
பிரிட்டனில் அதிதீவிர கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் அந்நாட்டிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களிலும், பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கடும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் சிறப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 7-ம் தேதி முதல் பிரிட்டனிலிருந்து வந்த விமானப் பயணிகளின் விவரங்களை சேகரிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான், கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையில் மட்டும் பிரிட்டனின் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் 291 பயணிகள் கர்நாடகம் வந்துள்ளனர். அவர்களில் 49 பேர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்கவில்லை என்பதும், ஏர் இந்தியா விமானத்தில் வந்த 246 பயணிகளில் 89 பேர் கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டு வரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் கூறுகையில், இவர்கள் யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை என்றாலும் இவர்களது விவரங்களை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளோம், அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.