வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் பக்கம் கேரளம் நிற்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 28 நாள்களாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,“ தில்லியில் நடந்து வரும் விவசாயிகளின் கிளர்ச்சி நாட்டில் இதுவரை கண்டிராத போராட்டங்களில் மிகக் கடுமையான மற்றும் மிகச் சிறந்த ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விவசாயிகள் தான் நாட்டின் உணவு வழங்குநர்கள். எனவே அவர்களின் கோரிக்கை நாட்டின் பொது நலனாக பார்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், போராட்டத்தை தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
"மத்தியில் உள்ள பாஜக அரசு விவசாயிகளின் நலனை முன்னிறுத்தாமல் நிறுவனங்களின் நலனுக்கு அவை முக்கியத்துவம் கொடுக்கின்றன. மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளம் துணை நிற்கும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரள இடது முன்னணி அரசு கோரிய சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திற்கான அனுமதியை அம்மாநில ஆளுநர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.