ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி காலை 6.00 மணி வரை இரவு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் அரசு தடை விதித்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
ராஜஸ்தானில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட முக்கிய நகரங்களில் சந்தைகள் இரவு 7.00 மணியோடு மூடப்படும். புத்தாண்டு விழாவுக்கான அனைத்து கூட்டங்களுக்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 6 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், முகக்கவசம் அணிவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 992 பேருக்கு தொற்றும், 8 பலியும் பதிவாகியுள்ளது. 937 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் இதுவரை மொத்த பாதிப்பு 3,01,708 ஆகவும், பலி எண்ணிக்கை 6,642 ஆகவும் பதிவாகியுள்ளது.