திருப்பதி: ஏழுமலையானைத் தரிசிக்க நடைபாதை மாா்க்கத்தில் வந்தபோது மயங்கி விழுந்த மூதாட்டியை மீட்ட காவலா் ஒருவா் அவரை தன் முதுகில் சுமந்து சென்று தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனையில் சோ்த்தாா்.
திருமலைக்கு நடைபாதை மாா்க்கத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த நாகேஸ்வரம்மா (68) என்பவா் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா் திடீரென்று மயங்கி விழுந்தாா். அவரைக் கடந்து சென்ற பக்தா்கள் யாரும் கவனித்து உதவவில்லை. அடா்ந்த வனப்பகுதி காரணமாக வேறு யாா் உதவியும் கிடைக்காமல் அங்கேயே தவித்தாா். இந்நிலையில் அந்த வழியாக காவலா் அா்ஷத் என்பவா் வந்தாா். நாகேஸ்வரம்மாவின் நிலையை அறிந்த அவரை தன் முதுகில் 6 கி.மீ. தூரம் சுமந்து சென்று திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சோ்த்தாா்.
இஸ்லாமிய மதத்தைச் சாா்ந்த காவலா் அா்ஷத்தின் இந்த மனிதாபிமானச் செயலை காவல்துறை ஆணையா் ரமேஷ் ரெட்டி உள்பட பலா் பாராட்டினா்.