கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் ரஷியா இடையே நடைபெற இருந்த வருடாந்திர உச்சி மாநாடு ரத்து செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ரஷியா இடையே கையெழுத்தான ‘இந்தியா-ரஷ்யா மூலோபாய கூட்டாண்மை குறித்த பிரகடனத்தின்படி ஆண்டுதோறும் இருநாடுகளிடையே உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு நடைபெற இருந்த உச்சி மாநாடு ரத்து செய்யப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ரஷியாவின் தூதர் நிகோலாய் குடாஷேவ், இருநாடுகளுக்கிடையேயான வருடாந்திர உச்சிமாநாட்டிற்கான புதிய தேதிகளை தேர்ந்தெடுக்க இந்தியாவுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளில் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.