கர்நாடகத்தில் இன்று முதல் பின்பற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இரவுநேர பொதுமுடக்கம் திரும்பப் பெறப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்றுப் பரவி வருவதோடு அந்த நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒரு சிலருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் கர்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இரவுநேர பொதுமுடக்க உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக மாநில அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.