புது தில்லி: விவசாயிகளின் நலன்களைக் காக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் கடந்த நான்கு வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, விவசாயிகள் சங்கத்தினருடன் முக்கிய அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்களில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஒருவர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த நளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தொடர் சுட்டுரைப் பதிவுகளை புதன்கிழமை வெளியிட்டுள்ளார் ராஜ்நாத் சிங். அவர் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் சரண் சிங், தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் நலன்களுக்காக குரல் கொடுத்தவர். விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தங்களின் விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெற வேண்டும் என்றும் பாடுபட்டவர். விவசாயிகளின் வருமானம் பெருக வேண்டும் என்று விரும்பியவர்.
சரண் சிங்கின் பிறந்த நாள் விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படும் வேளையில், அவரை முன்னுதாரணமாகக் கொண்டு விவசாயிகளின் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் நலன்களைக் காக்க பிரதமர் மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் அதை வலியுறுத்திச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அரசு உணர்வுபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்கள் தங்களின் போராட்டத்தை விரைவில் திரும்பப் பெறுவார்கள் என நம்புகிறேன் என்றார் ராஜ்நாத் சிங்.