கதுவா: காஷ்மீரில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம், மச்சேடி பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது வெள்ளிக்கிழமை மாலை திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து நடந்த மீட்பு நடவடிக்கையில் 3 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இரண்டு பேர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களில் ஹரியானாவின் சோனிபட்டில் வசிக்கும் சுபேதார் எஸ்.என்.சிங் (45), சம்பாவில் வசிக்கும் நாயக் பர்வேஸ் குமார் (39) என்பது தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர் பானிபட் ஹரியானாவில் வசிக்கும் மங்கல் சிங் (46) என்பதும், அவர் தற்போது மேல் சிகிச்சைக்காக எம்.எச். பதான்கோட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.