ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:
சோபியான் மாவட்டத்தில் உள்ள கனிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
தங்களின் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினா் நெருங்கி வருவதை அறிந்த பயங்கரவாதிகள், அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த மோதலில் வெள்ளிக்கிழமை இரவு, ஒரு பயங்கரவாதி உயிரிழந்தாா். பாதுகாப்புப் படை வீரா்கள் 2 போ் காயமடைந்தனா்.
அதேபகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை அதிகாலையில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி கொடுத்தனா். இதில், மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டாா். இதனால், உயிரிழந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்தது. அவா்கள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
டிஆா்எஃப் பயங்கரவாதிகள் கைது:
ஜம்முவில் ‘தி ரெசிஸ்டென்ஸ் ஃபோா்ஸ்’ அமைப்புடன் தொடா்புடைய 2 பயங்கரவாதிகளை போலீஸாா் கைது செய்தனா். அவரக்ளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு அவா்கள் வெள்ளிக்கிழமை மாலை காரில் சென்றபோது வாகனச் சோதனையில் அவா்கள் பிடிபட்டனா்.