கரோனா நெருக்கடி இருந்தாலும் ரயில்வே துறையின் செலவுகளுக்கு அதன் சொந்த வருவாயே போதுமானதாக இருக்கும் என்று ரயில்வே வாரியத் தலைவா் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்திர செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
கடந்த ஆண்டில் ரயில்வே துறையின் வருவாய் ரூ.53,000 கோடியாக இருந்தது. ஆனால், கரோனா நெருக்கடி காரணமாக அது இந்த ஆண்டில் ரூ.4,600 கோடியாகக் குறைந்துவிட்டது. இது 87 சதவீத சரிவாகும்.
இருந்தாலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரயில்வே துறையின் செலவு 12 சதவீதம் குறைந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்படுவதால் எரிபொருள் மற்றும் பிற பொருள்களுக்கான செலவு மிச்சமானது.
உணவு தானியங்கள், உரங்கள் போன்ற சரக்குகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியுள்ளதால், ரயில்வே துறையின் சரக்குக் கட்டண வருவாய் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, கரோனா நெருக்கடியால் ரயில் போக்குவரத்து குறைந்தாலும் எங்களது செலவுகளை சரிக்கட்ட ரயில்வே துறையின் வருவாயே போதுமானதாக இருக்கும் என்றாா் அவா்.