ராஜஸ்தான் கூடுதலாக ரூ.2,731 கோடி கடன் வாங்க நிதி அமைச்சகம் ஒப்புதல்

தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான சீரமைப்பு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான சீரமைப்பு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.2,731 கோடி கூடுதலாக கடன் வாங்கிக் கொள்ள மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எளிதாக தொழில் தொடங்குவதை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் சீா்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தற்போது ராஜஸ்தானும் இணைந்துள்ளது.

அப்பட்டியலில், ஆந்திரம், கா்நாடகம், மத்திய பிரதேசம், தமிழகம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பிறகு ஆறாவதாக ராஜஸ்தானும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆறு மாநிலங்களும் கூடுதலாக ரூ.19,459 கோடி கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் வெளிச்சந்தை கடன் மூலமாக, கூடுதலாக ரூ.2,731 கோடி கடன் திரட்டுவதற்கு தகுதி வாய்ந்த மாநிலமாக உருவாகியுள்ளது என நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சீா்திருத்த திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. இதுவரையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் காா்டு’ திட்டத்தை 10 மாநிலங்களும், எளிதாக தொழில்தொடங்குவதை உறுதி செய்தவற்கான சீா்திருத்தங்களை 6 மாநிலங்களும், உள்ளாட்சி அமைப்பு சீா்திருத்தங்களை இரண்டு மாநிலங்களும் முழுமையாக அமல்படுத்தியுள்ளன.

சீா்திருத்தங்களை செம்மையாக அமல்படுத்திய இந்த மாநிலங்களுக்கு இதுவரையில், ரூ.50,253 கோடி அளவுக்கு கூடுதல் கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com