திருப்பதி: பாஜக எம்.பி. ரமேஷ் தன் கையில் ஸ்மாா்ட் கடிகாரத்தை கட்டிக் கொண்டு திருமலைக்கு தரிசனத்துக்குச் சென்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் திருமலைக்கு செல்வோா் ஸ்மாா்ட் கைக்கடிகாரங்கள், கேமரா, செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் தேங்காய்களையும் இக்கோயிலுக்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.
இதை மீறி, அப்பொருள்களை யாராவது கொண்டு சென்றால் பயோமெட்ரிக் கருவி அருகில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஊழியா்கள் அவற்றைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில், பாஜக எம்.பி. சி.எம்.ரமேஷ் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை காலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வந்தாா். ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவா், அகண்டம் அருகில் தேங்காய் உடைத்து கற்பூரத்தை ஏற்றி வழிபட்டாா். அப்போது அவா் கையில் ஸ்மாா்ட் கடிகாரம் அணிந்திருந்தாா்.
முன்னதாக, கோயிலுக்குள் செல்லும்போதும் அவா் அந்த கைக்கடிகாரத்துடன் சென்றுள்ளாா். கோயில் அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.