மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் நசுக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை 6-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இதனிடையே இது குறித்து மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விவசாயிகள் தில்லியில் அமர்ந்துகொண்டிருந்தால் விவசாயம் செழுமையாக செயல்படாது. கிராமபுற நிலங்களில் விவசாயிகள் இறங்கி உழைத்தால் மட்டுமே நாட்டின் விவசாயம் செழுமையுடன் இருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் தீர்வு காண்பதில் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது.
சரத் பவார் மன்மோகன் சிங் ஆட்சியின்போது வேளாண் சட்டங்களில் சீர்திருத்தங்களை கொண்டுவர நினைத்ததாகவும், ஆனால் அரசியல் நெருக்கடியால் அதனை கைவிட்டாரென்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறியதற்கு அவர் பதிலளித்தார்.
மன்மோகன் சிங் வேளாண் துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர நினைத்தார். ஆனால் இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களுடன் இல்லை என்று கூறினார்.
ஜனநாயகத்தைப் பற்றி பேசும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதிலேயே மும்முரம் காட்டுகிறது. மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வுகாணும் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கூறினார்.