திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் வசதியற்ற ஏழைகளுக்கு அரசின் சாா்பில் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, சித்தூா் மாவட்டம் காளஹஸ்தி அருகில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
‘அனைவருக்கும் வீடு’ எனப்படும், வசதியற்றோருக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதியை அடுத்த காளஹஸ்தி அருகே திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
முன்னதாக, தனி ஹெலிகாப்டா் மூலம் காளஹஸ்திக்கு வந்த முதல்வரை அரசு அதிகாரிகள் வரவேற்று ஊரந்தூா் பகுதிக்கு அழைத்துச் சென்றனா். அங்கு நடைபெற்ற விழாவில் மக்களுக்கு இலவச வீட்டுமனைகளை ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினாா்.
இதையடுத்து, அந்த மனைகளில் வீடு கட்டும் திட்டத்துக்கு நடைபெற்ற பூமி பூஜையிலும் முதல்வா் ஜெகன் பங்கேற்றாா்.
இந்த விழாவில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் திரளாகக் கலந்து கொண்டனா்.
ஊரந்தூரில் 167 ஏக்கா் பரப்பளவில் ‘ஒய்எஸ்ஆா் ஜெகன் அண்ணா’ என்ற பெயரில் புதிய குடியிருப்புப் பகுதியை அமைத்து, அங்கு குடிநீா்த் தொட்டி, கழிவுநீா்க் கால்வாய் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய 6,232 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4,299 மனைகள் நகர மக்களுக்கும், 465 மனைகள் காளஹஸ்தியை அடுத்த கிராமப்புற மக்களுக்கும், 1,468 மனைகள் ஏா்பேடு கிராமப் பகுதிகளில் வாழும் வசதியற்றோருக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடியிருப்பில் பசுமையான சூழலை ஏற்படுத்தி சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் 8,600 மரக்கன்றுகள் நடப்பட்டன.