எனது கடைசி போராட்டம் விவசாயிகளுக்காகவே: அண்ணா ஹசாரே
புணே: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுத்தால் தனது கடைசி போராட்டம் அவா்களுக்காகவே இருக்கும் என சமூக சேவகா் அண்ணா ஹசாரே (83) தெரிவித்துள்ளாா்.
மகராஷ்டிராவின் அகமது நகா் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தியில் வசித்து வரும் ஹசாரே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மேலும் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே தந்து வருகிறது. அதனால், அரசின் மீது இனி எந்த நம்பிக்கையும் வைக்கப்போவதில்லை. எனது கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனா். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம். வரும் ஜனவரி மாத இறுதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன். ஆனால், இது எனது கடைசிப் போராட்டமாக இருக்கும் என அண்ணா ஹசாரே தெரிவித்தாா்.
எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் மற்றும் வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் (சிஏசிபி) ஆணையத்துக்கு சுயாட்சி வழங்குதல் போன்ற கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமருக்கு கடந்த டிசம்பா் 14-இல் அண்ணா ஹசாரே கடிதம் ஒன்றை அனுப்பினாா். இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க மத்திய அரசு ஒரு மாத கால அவகாசத்தை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.