பிரிட்டன் விமானங்களுக்கானத் தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படதைத் தொடர்ந்து, அருகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் புதியவகை கரோனா பரவியது.
கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளில் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை டிசம்பர் 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.
பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் வருவதற்கும், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கரோனா பரவல் காரணமாக பிரிட்டன் உடனான விமான போக்குவரத்துத் தடை டிசம்பர் 31-ஆம் தேதிக்கு பிறகு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
'' இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, இந்தியாவில் நான்கு ஏர்லைன் சேவைகள் மூலம் இந்தியா - பிரிட்டன் இடையே வாரத்திற்கு 67 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 2,000 - 2,500 பேர் பயணிக்கின்றனர்.
இதனிடையே பிரிட்டனில் தற்போது அதிக அளவில் புதியவகை கரோனா பரவி வருவதால், பிரிட்டனிலிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியாவிற்கு வந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 7 பேருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது'' என்று கூறினார்.