குவாஹாட்டி: அஸ்ஸாமில் மாநில அரசின் கீழ் இயங்கிவரும் அனைத்து மதரஸாக்களையும் வரும் 2021 ஏப்ரல் 1 முதல் பொதுப் பள்ளிகளாக மாற்றும் வகையில் அந்த மாநில அரசு திங்கள்கிழமை சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளது.
அஸ்ஸாம் சட்டப் பேரவையின் 3 நாள் குளிர்கால கூட்ட தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை, கல்வி அமைச்சர் ஹிமந்தா விஸ்வ சர்மா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள "அஸ்ஸாம் மதரஸா கல்வி சட்டம் 1995' மற்றும் "மதரஸா கல்வி நிலைய பணியாளர்களின் சேவைகள் மற்றும் மறுநிர்ணய சட்டம் 2018' ஆகிய இரண்டு சட்டங்களையும் நீக்குவதற்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா வகை செய்கிறது.
இது குறித்து ஹிமந்தா விஸ்வ சர்மா கூறுகையில், "அனைத்து மதரஸாக்களும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும். மதரஸாக்களின் தரம், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதியம், சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றார். அஸ்ஸாம் மாநில அரசின் கீழ் 610 மதரஸாக்கள் உள்ளன.