போபால்: மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற 28 எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை பதவியேற்றனா்.
மத்திய பிரதேசத்தில் கடந்த நவம்பா் 3-ஆம் தேதி 28 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.
வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு இடைக்கால பேரவைத் தலைவா் ராமேஷ்வா் சா்மா பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இதன் மூலம் 230 உறுப்பினா்களை கொண்ட அந்த மாநில சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 126-ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸின் பலம் 96-ஆக உள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தொடரில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்க இருந்தனா். ஆனால் எம்எல்ஏக்கள், பேரவை பணியாளா்கள் பலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் கூட்டத்தொடா் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பேரவைத் தலைவா் அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.