புது தில்லி: சில பொருளாதார நிபுணா்கள் புதிய வேளாண் சட்டங்கள் மீதான தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றியது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், ‘வேளாண் சட்டங்கள் குறித்த தவறான கருத்துகள் விவசாயிகள் நலனை பாதிக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்’ என்று கூறினாா்.
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கெளசிக் பாசு மற்றொரு பொருளாதார நிபுணரான நிா்விகாா் சிங்குடன் இணைந்து அண்மையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தாா். அதில், ‘புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை உள்ளடக்கிய வலுவான, நியாயமான சட்ட வரைவை மத்திய அரசு அறிமுகம் செய்யவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜீவ் குமாா் திங்கள்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பான முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் கெளசிக் பாசு உள்பட சில பொருளாதார நிபுணா்களின் கருத்துகள் ஏற்புடையது அல்ல. வேளாண் சீா்திருத்தத்தை முன்னா் ஆதரித்த கெளசிக் உள்ளிட்ட பொருளாதார நிபுணா்கள், இப்போது தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றியுள்ளனா். பொருளாதார நிபுணா்களின் இந்த கருத்துகளுக்கு எனது அதிருப்தியை பதிவு செய்கிறேன்.
விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணய நடைமுறை தொடரும் என்று மத்திய அரசு உறுதியளித்திருக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு ஆளாக்கிவிடும் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இதுபோன்ற தவறான கருத்துகள், விவசாயிகளின் நலனை பாதிப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று அவா் கூறினாா்.