கரோனா பரவல் காரணமாக தேசிய தலைநகர் தில்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவிவரும் உருமாறிய கரோனா வைரஸ் காரணமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பெரிய அளவில் மக்கள் கூட்டங்களைத் தவிர்க்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, தில்லியில் டிசம்பர் 31(இன்று) மற்றும் ஜனவரி 1-ம் தேதி காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1-ம் தேதி இரவு 11 மணி முதல் ஜனவரி 2-ம் தேதி காலை 6.00 மணி வரையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தைகள், மால்கள் மற்றும் பிற இடங்களுக்கு வருகை தரும் தில்லி மக்கள் இரவு 11 மணிக்கு முன்னதாக வீடு திரும்ப வேண்டும். இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. பிற மாநிலங்களிலிருந்து மக்கள் நகரத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
தில்லியில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 677 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 6,24,795ஐ எட்டியுள்ளது. 6.08 லட்சத்துக்கும் அதிகமானோர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும், 5,838 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.