ஒடிசாவில் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருவாகிய புதிய வகை கரோனா வைரஸ் தொற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது. பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புதியவகை கரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த ஆண்டும் கரோனா பரவல் இருக்கலாம் என்று வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒரு சில மாநிலங்கள் தடைவிதித்துள்ள நிலையில், ஒடிசாவிலும் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.31) இரவு மற்றும் நாளை இரவுக்கு இந்த முழு ஊரடங்கு உத்தரவு பொருந்தும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கடைகள், அலுவலகங்கள், கட்டுமானப் பணிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.