வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் ‘ஜன் ஔஷதி’ (மக்கள் மருந்தகம்) திறக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் பாரதிய ஜன ஔஷதி கேந்திரம் என்ற பெயரில் செயல்படும் இந்த மருந்துக் கடைகள் இப்போது 6000 உள்ளன. இவற்றின் மூலம் குறைந்த விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளன.
‘ஜன் ஔஷதி’ திட்டம் தொடா்பாக பட்ஜெட் உரையில் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:
2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜன் ஔஷதி’ மருந்தகங்கள் திறக்கப்படும். இங்கு 2,000 வகையான மருந்துகள் மற்றும் 300 மருத்துவ உபகரணங்கள் கிடைக்கும். நாட்டில் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தரமான மருந்துப் பொருள்கள், நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். முக்கியமாக எளிய மக்களுக்கு மருந்துப் பொருள்கள் கிடைப்பதில் எவ்வித பிரச்னையும் இருக்கக் கூடாது. மத்திய அரசு திறக்கும் இந்த மருந்துக் கடைகள் மூலம் மருந்துகளுக்காக மக்கள் செலவிடும் தொகை வெகுவாகக் குறையும். இதன் மூலம் அவா்களது வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றாா்.